தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ்! உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, முதற்கட்டமாக புதிய கார்டுகளை விநியோகம் செய்யும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த விநியோக முறை முறைப்படி தொடங்கி வைக்கப்படவுள்ளது.
தமிழகம் முழுவதும் விநியோகிப்பதற்காக சுமார் 46,000 புதிய குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய குடும்ப அட்டைகள் கோரி மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 2.25 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன.
'புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்கும் பணி அடுத்த சில நாட்களில் தொடங்கப்படும். முதற்கட்டமாக 46,000 அட்டைகள் அச்சிடப்பட்டு தயாராக உள்ளன. தகுதியான பயனாளிகளுக்கு இந்த அட்டைகள் படிப்படியாக தடையின்றி வழங்கப்படும்' என்று உணவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு வரும் முதலமைச்சர் விஜயின் முதல் பிறந்தநாள் என்பதால், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவிக) இதனை மாநிலம் தழுவிய அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஜூன் 22 அன்று முதலமைச்சர் விஜய்யின் சொந்த சட்டப்பேரவைத் தொகுதியான பெரம்பூரில் நடைபெறும் அரசு விழாவில், அவர் கலந்துகொண்டு புதிய குடும்ப அட்டைகளை பயனாளிகளுக்கு நேரில் வழங்கி இத்திட்டத்தை முறைப்படி தொடங்கி வைப்பார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகள் தகுதியான அடித்தட்டு மக்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்யவும், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை விரைந்து முடிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.