நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்தி வரும் தொடர் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற மாணவர்களை காவல்துறையினர் தடுத்து, கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி தடியடி நடத்தினர். டெல்லி காவல்துறையின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து நாடு முழுவதும் இருந்து மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு குரல்கள் வலுத்து வருகின்றன.
இதற்கிடையில், மத்திய அரசை கண்டித்தும், நாடாளுமன்றத்தில் நீட் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தியும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உட்பட காங்கிரஸ் எம்.பிக்கள் பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்தினர். இவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தியும் சென்னையில் தமிழ்நாடு கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகமான பாலன் இல்லத்தில், கம்யூனிஸ்ட் கட்சி மாணவர் அணியுடன் இணைந்து இவர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 4வது நாளாக தொடர்கிறது.
மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தி.மு.க இளைஞரணி செயலாளர் வீரமணி நேற்று போராட்டக்களத்தில் மாணவர்களை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதற்கு முதலமைச்சர் விஜய் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த வீரமணி, “முதலமைச்சர் விஜய் படங்களில் மட்டுமே ஹீரோவாக இருப்பார்; நிஜ வாழ்க்கையில் அவர் ஒரு வில்லனாக இருக்கிறார். எப்படி இவரை நம்பி மக்கள் வாக்களித்தார்கள்? இவர் ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டை திருத்தி விடுவார், மாற்றி விடுவார் என்று மக்கள் நம்பினார்கள் இல்லையா? அதனை தோலுரித்துக் காட்டும் ஒரு சம்பவம்தான், சென்னையில் போராடிய மாணவர்களை கைது செய்தது” என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்பதற்கு கூட ஒன்றிய பாசிச பா.ஜ.க-வும், தமிழ்நாடு த.வெ.க அரசும் தயாராக இல்லை. என்ன காரணத்திற்காக இவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள்? மாணவர்களை இரக்கமின்றி லத்தியால் அடிக்கிறார்கள். இது மிகுந்த மன வேதனைக்குரிய விஷயம். இதனை தி.மு.க வன்மையாக கண்டிக்கிறது.
நீட் தேர்விற்கு எதிராக எங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றாலும், அதற்கு தி.மு.க-வின் முழு ஆதரவு உண்டு என்பதை தெரிவித்துக் கொள்ளவே தி.மு.க தலைவர் எங்களை இங்கு அனுப்பி வைத்திருக்கிறார். தொடர்ந்து மாணவர் அணியும், தமிழ் மாணவர் மன்றமும் எங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினாலும், நீட் தேர்வை எதிர்த்து நாங்கள் குரல் கொடுப்போம்” என்று தெரிவித்தார். இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
