சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிர் அணி மற்றும் தொண்டரணியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். திமுகவின் அமைப்பு ரீதியிலான 78 மாவட்டங்களைச் சேர்ந்த மாநில, மாவட்ட, மாநகர, மகளிர் அணி நிர்வாகிகள், மகளிர் தொண்டரணி நிர்வாகிகள், மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்கள் இதில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கனிமொழி கருணாநிதி பேசுகையில், 'தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், மக்களுக்காகவும் தொடர்ந்து போராடும் ஒரே தலைவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தமிழ்நாடு பாதுகாப்பு இல்லாத மாநிலம் என்றும், பெண்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதாகவும் பல கட்டுக்கதைகளைக் கூறி தவெக ஆட்சிக்கு வந்தது. தற்போது, தமிழ்நாட்டுப் பெண்கள் 42 சதவீதம் பேர் வேலைக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள் என முதல்வர் விஜய் கூறியிருக்கிறார். இது திமுகவின் உழைப்பால் கிடைத்த பலன். தவெக நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட பெண்களை தரக்குறைவாக படம் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி வன்முறையை கடந்து வந்தோம். அதை தாண்டிய ஒரு பாதுகாப்பு இல்லாத சூழலை தமிழகத்தில் பெண்கள் எதிர்நோக்கி உள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் இந்த சூழலில், ஆட்சியில் இருப்பவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இதற்கு முன்பு, திமுக தலைவர் ஸ்டாலின் அறிமுகப்படுத்திய பிங்க் பேட்ரோலை பெயர் மாற்றி, சிங்கப்பெண் அதிரடிப் படை என்று கொண்டு வந்துள்ளனர். திமுக ஆட்சியைப் பார்த்து காப்பி அடிக்காத மாநிலமே இல்லை. தமிழ்நாட்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை கொடுத்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். தேர்தலால் ஆட்சி மாறி இருக்கலாம்; ஆனால் சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வந்த இயக்கம் திமுக. 70 ஆண்டுகளாக பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் கதைகளை மக்களிடம் கொண்டு சேருங்கள்' என்றார்.
கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 'எதிர்க்கட்சியாக இருக்கும் நாம் மீண்டும் ஆளுங்கட்சியாக மாற வேண்டும் என்றால், இன்னும் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட வேண்டும். அதற்கான களம்தான் இந்தக் கூட்டம். புதிய அரசைப் பற்றி, ஆறு மாதம் விமர்சனம் செய்யாமல் இருப்போம் என்று நான் சில நிகழ்ச்சிகளில் தெரிவித்தேன். அதை உண்மைக்கு மாறாக திரித்து, ஆட்சியை கவிழ்க்க சதியா? எனக்கேட்டு நம் எதிரிகள் அலறத் தொடங்கி விட்டனர். திமுக பொறுப்பான எதிர்க்கட்சியாக தனது கடமையை உறுதியாக செய்யும் என்று பல முறை சொல்லி விட்டேன். இந்த ஆட்சியின் தோல்விகளை நாம் தொடர்ந்து சுட்டிக் காட்டுவோம். கேள்வி கேட்போம். அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்றுவார்கள்.
தேர்தலுக்கு முன்பாக பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தோம். ஆனால் தற்பொழுது இந்த ஆட்சியில் தினந்தோறும் நடக்கும் குற்ற சம்பவங்கள், சென்னை மற்றும் பல ஊர்களை இருளில் மூழ்கடிக்கும் மின்வெட்டு பிரச்சனை, விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி என நடந்த நாடகங்கள், இவை எல்லாம் ஏன் இந்த ஆட்சிக்கு வாக்களித்தோம் என மக்கள் கோபமாக வருந்தும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. தொலைக்காட்சிகளில் கொடூரமான குற்றச் சம்பவங்கள்தான் தற்பொழுது செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. திருவைகுண்டத்தில் ஆளுங்கட்சியை சார்ந்த நிர்வாகிகளே பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து இரண்டு அமைச்சர்களிடம் முறையிட்டும் நீதி கிடைக்கவில்லை. முதல்வர் விஜய், அதிமுக எம்எல்ஏக்களை ஷாப்பிங் செய்து கொண்டு இருக்கிறார். அவருடைய ஆட்சி மீது அவருக்கே நம்பிக்கை இல்லையா? பாஜகவின் ஜெராக்ஸ் போன்று விஜய் செயல்படுகிறார். அவருக்கு உதவி செய்வதாக நினைத்து ஆதரவளித்த கட்சிகள், தர்ம சங்கடத்தில் தவிக்கின்றன. ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் அசிங்கமான ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது. மேடைக்கு மேடை கான்பிடென்டாக இருங்கள் என்று முதல்வர், முதலில் அவர் கான்பிடென்டாக இருக்கிறாரா என்பதை தெரிவிக்க வேண்டும். தீர்ந்து போன சக்தி என்று கூறி, அந்த கட்சியின் உறுப்பினர்களை திருடிக் கொண்டிருக்கிறார் முதல்வர். பாலியல் வன்கொடுமைகள், அரிவாள் வெட்டு, பெட்ரோல் குண்டு வீச்சு என தினமும் நடக்கும் குற்றங்களை பார்த்து யாராலும் விமர்சிக்காமல் இருக்க முடியுமா? பொதுமக்களின் பாதுகாப்பை பற்றி எப்படி பேசாமல் இருக்க முடியும்? டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், திமுக ஆட்சியில் செய்த சாதனைகள் சிலவற்றை தனது உரையில் குறிப்பிட்டார்' என்றார்.