சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஊடகத்திற்கும் பதில் சொல்வதில்லை, பேரவையிலும் பதில் சொல்வதில்லை. பழி போடுவதை வழக்கமாக அரசு வைத்துள்ளது" என குற்றம் சாட்டினார்.
மேலும், "இன்று சட்டப்பேரவையில் பேசி பேரவையையே ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றியுள்ளார் முதலமைச்சர் விஜய்" என்றும் அவர் பேசினார். சட்டமன்றத்தை சினிமா தியேட்டர் போல மாற்றிவிட்டதாகவும், முழுக்க முழுக்க ரீல்ஸ்க்காகவும், டிரெண்டுக்காகவுமே முதலமைச்சர் பேசுவதாகவும் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார். "இன்று விசில் அடிக்கிறார்கள், விரைவில் அமைச்சர்கள் பாடல் போட்டு நடனமாடுவார்கள்" என்றும் அவர் சாடினார்.
சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் 30 நிமிடங்கள் பேசியதாகவும், அதில் சுமார் 10 ரீல்ஸ் அளவுக்கு காட்சிகள் எடுக்கலாம் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார். ஸ்கிரிப்டை பேசி முடிக்கும் வரை யாரும் கட் சொல்லக் கூடாது என்றும், சட்டமன்றத்தை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிய முதலமைச்சர், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தவர் போலத்தான் இருக்கிறார் என்றும் அவர் விமர்சித்தார். முதலமைச்சர் செய்தியாளர்களுக்கும் பதில் சொல்ல மறுப்பதாகவும், அவையிலும் பதில் சொல்வதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் பேரவைக்கு வரும்போது தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்பது நெறிமுறை என்றும், இது குறித்து முதலமைச்சர் விஜய்க்கு தெரியாதது வருத்தமளிக்கிறது என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார். குடியரசுத் தலைவருக்கு தனி நெறிமுறை உள்ளதாகவும், அது ஆளுநருக்கு கிடையாது என்றும் அவர் விளக்கினார்.