தமிழகத்தில் மத வழிபாட்டுத்தலங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு அருகில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அடுத்து, எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த கடைகள் மூடப்பட்டுள்ளன என்ற விரிவான பட்டியலை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில், மூடப்பட்ட 717 மதுக்கடைகளின் எண்கள் மற்றும் அவை அமைந்துள்ள பகுதிகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஒவ்வொரு மாவட்ட வாரியாக எத்தனை கடைகள் மூடப்பட்டுள்ளன என்ற எண்ணிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள விவரங்களின்படி, சென்னை வடக்கு பகுதியில் 13 கடைகளும், சென்னை மத்தியிலும் சென்னைப் புறநகரிலும் தலா 9 கடைகளும் மூடப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் முறையே 10 மற்றும் 8 கடைகளும், திருவள்ளூர் கிழக்குப் பகுதியில் 27 கடைகளும் மூடப்பட்டுள்ளன.
கோவை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் மொத்தம் 71 கடைகள் மூடப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் 8 கடைகளும், ஈரோட்டில் 42 கடைகளும், திருப்பூரில் 31 கடைகளும், நீலகிரியில் 27 கடைகளும் மூடப்பட்டுள்ளன. அரக்கோணம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தலா 7 கடைகளும், நாமக்கல்லில் 14 கடைகளும், சேலத்தில் 22 கடைகளும், திருவண்ணாமலையில் 19 கடைகளும், வேலூரில் 6 கடைகளும் மூடப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் 21 கடைகளும், நாகையில் 4 கடைகளும், புதுக்கோட்டையில் 17 கடைகளும், பெரம்பலூரில் 6 கடைகளும், தஞ்சாவூரில் 6 கடைகளும், திருச்சியில் 15 கடைகளும், திருவாரூரில் 6 கடைகளும் மூடப்பட்டுள்ளன.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் 9 கடைகளும், திண்டுக்கல்லில் 26 கடைகளும், கன்னியாகுமரியில் 15 கடைகளும், ராமநாதபுரத்தில் 29 கடைகளும், தேனியில் 12 கடைகளும், திருநெல்வேலியில் 33 கடைகளும், தூத்துக்குடியில் 63 கடைகளும் மூடப்பட்டுள்ளன. மதுரை தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் முறையே 39 மற்றும் 13 கடைகளும், விருதுநகரில் 42 கடைகளும், சிவகங்கையில் 18 கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில், தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக 63 கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், நாகை மாவட்டத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக 4 கடைகள் மூடப்பட்டுள்ளன.