வியட்நாமில் சுற்றுலா சென்றபோது படகு விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 10 தமிழர்களின் உடல்கள் இன்று தமிழகம் கொண்டுவரப்பட்டன. இந்த துயரச் சம்பவத்தால் மாநிலமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் வியட்நாம் சென்றிருந்தனர். கடந்த சனிக்கிழமை (ஜூலை 11) அன்று, புகழ்பெற்ற ஃபூ குவொக் தீவிற்கு அருகே 'ஹான் மே ரட் நிகோய்' தீவிலிருந்து 'அன் தோய் துறைமுகத்தை நோக்கி அதிவேக சுற்றுலாப் படகில் அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர்.
துறைமுகத்திற்கு சுமார் 500 மீட்டர் தொலைவில் இருந்தபோது, கடலில் திடீரென எழுந்த ராட்சத அலை படகின் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறிய படகு தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 15 இந்தியப் பயணிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 10 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 3 பேர் ஆந்திராவையும், 2 பேர் கேரளாவையும் சேர்ந்தவர்கள்.
விபத்துக்குள்ளான படகில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் 'லாவா' செல்போன் நிறுவனத்தின் விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்கள் ஆவர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக வணிகம் செய்ததற்காக, அவர்களின் பணியைப் பாராட்டி, நிறுவனம் சார்பாக இந்த இலவச வியட்நாம் சுற்றுலாவுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
உயிரிழந்தவர்களில் தர்மபுரியைச் சேர்ந்த செந்தில்குமார், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த பாபு, திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ஷேக் அப்துல்லா போன்றோரின் சோகக் கதைகளும் தற்போது வெளிவந்துள்ளன. குடும்பத்தினர் வற்புறுத்தியும், நிறுவனத்தின் கட்டாயத்தின் பேரிலும் இந்தச் சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து அறிந்தவுடன், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் உடனடியாக வியட்நாம் தூதரகத்துடன் தொடர்புகொண்டு மீட்புப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டனர்.
வியட்நாமில் பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு, உயிரிழந்த 15 இந்தியர்களின் உடல்களும் நேற்று இரவு வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் முதலில் மும்பைக்குக் கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து, அந்தந்த மாநில அரசுகளின் ஒருங்கிணைப்புடன், தமிழகத்தைச் சேர்ந்த 10 பேரின் உடல்கள் இன்று காலை சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களுக்குக் கொண்டு வரப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும், வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த மேலும் 3 பேரின் உடல்கள் கோவை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தன. திருச்சியைச் சேர்ந்த பாலாஜி, அழகுராஜன், ஷேக் அப்துல்லா ஆகியோரின் உடல்களும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
