தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஒரு அவசர கோரிக்கையை விடுத்துள்ளார். திமுகவின் இந்து விரோத பாதையில் த.வெ.க. அரசு செல்லக்கூடாது என்றும், கோவில் நிலங்கள் தனிநபர்களுக்கு சென்றுவிடாமல் இந்து சமய அறநிலையத்துறை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களில் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 3,084 ஏக்கர் 95 செண்ட் திருக்கோவில் இனாம் நிலங்களை, 3,390 நபர்களின் பெயரில் பதிவு மற்றும் விற்பனை செய்யும் வகையில், பதிவு தடையை நீக்குமாறு சம்பந்தப்பட்ட கோவில் செயல் அலுவலர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில் சொத்துக்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பக்தர்களால் கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்டு, கோவில் பெயரில் உள்ள சொத்துக்களை எந்தக் காரணத்திற்காகவும் வேறு யாருக்கும் பட்டா மாறுதல் செய்யக் கூடாது. ஆக்கிரமிப்பு உள்ளிட்ட எந்த வகையிலும் கோவில் சொத்துக்கள் பறிபோகாமல் பாதுகாக்க வேண்டியது இந்து சமய அறநிலையத்துறையின் சட்டப்பூர்வ கடமையாகும். ஆனால், தற்போது வெளியாகியுள்ள செய்திகள் இந்த கடமை மீறப்படுவதாக ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலங்களை தனிநபர்கள் பெயரில் பதிவு செய்ய இருக்கும் தடையை நீக்க எந்த அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டார் என்பதை முதல்வர் ஜோசப் விஜய் அவர்களும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களும் உடனடியாக தெளிவுப்படுத்த வேண்டும் என்று வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எந்தக் காரணத்தை கொண்டும் கோவில் நிலங்கள் தனி நபர்களுக்கு சென்றுவிடக் கூடாது என்பதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், திமுகவின் இந்து விரோத பாதையில் த.வெ.க. அரசு சென்று விடக்கூடாது என்றும் அவர் கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
