முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஒரு தலைவர் தானே அழிந்தால் கூட தனது கொள்கைகளும், இயக்கமும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், இயக்கமும், கழகத் தொண்டர்களும் அழிந்தால் கூட தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் நல்ல தலைவராக இருப்பதில்லை' என்று குறிப்பிட்டுள்ளார். திமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டதன் மூலம், அதிமுக தனது அடையாளத்தை இழந்துவிட்டதாகவும், சரியான நேரத்தில் தவறான முடிவுகள் எடுக்கப்பட்டதால் கட்சி தனது வெற்றிப் பாதையில் இருந்து விலகிச் சென்றுவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், தேர்தல் களத்தில் தனித்து விடப்பட்ட நிலையிலும் கழகத்திற்காக தேர்தல் பரப்புரையாற்றியதாகவும், ஆனால் 'மரணத்தை விடக் கொடியது புறக்கணிப்பு' என்பதை உணர்ந்ததாகக் கூறியுள்ளார். 'மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர் வாழ்வதைவிட, அவ்வாறு செய்யாததால் கெட்டான் என்று சொல்லப்படுதல் நன்று' என்ற வள்ளுவரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டியுள்ளார்.
மாணவப் பருவம் தொட்டு ரத்தமும் சதையுமாக இந்த இயக்கத்திற்காகப் பணியாற்றி, தற்போது விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதை எண்ணிப் பார்க்கையில், மனதில் ஏற்படும் கடுமையான வலியை வார்த்தைகளால் வடிக்க முடியவில்லை என்றும், நேரம் வரும்போது இதுகுறித்து மேலும் பேசுவதாகவும் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். 'புதிய இடத்தில் நடுவதற்கு புடுங்கிப் போன செடியில் இருக்கும் பழைய மண்ணைப் போல' இந்த இயக்கத்திற்காக ஆற்றிய பழைய நினைவுகளை என்ன செய்வது என்று தனக்கே தெரியவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.