ஐபிஎல் 2026 எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, குவாலிபையர் 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 27 பந்துகளில் 12 சிக்ஸர்களுடன் 97 ரன்கள் குவித்து அனைவரையும் கவர்ந்தார். அவரது அதிரடி ஆட்டத்தை கண்டு சக வீரரும் அனுபவ வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் வியப்பில் ஆழ்ந்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் குறித்துப் பேசிய அஸ்வின், 'இந்தச் சிறுவன் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவன் போலத் தெரிகிறான். இவனது ஷாட்கள் எதுவும் சாதாரணமானதாக இல்லை. இவ்வளவு பெரிய நாக்-அவுட் போட்டியில், அழுத்தங்களைச் சமாளித்து இத்தகைய ஆட்டத்தை வெளிப்படுத்துவது அசாதாரணமானது. பந்துவீச்சாளர்கள் மீது தனது கோபத்தை மைதானத்தில் வெளிப்படுத்துவதற்கு முன்பு, அவன் தியானம் செய்து தன்னை அமைதிப்படுத்திக் கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது' என வியப்புடன் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
சண்டிகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் குவித்தது. வைபவ் வெறும் 16 பந்துகளிலேயே அரைசதம் கடந்தார். அவருக்குத் துணையாக துருவ் ஜூரல் 20 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஸ்கோரை உயர்த்தினார். 244 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய ஹைதராபாத் அணிக்கு ஆரம்பமே சோதனையாக அமைந்தது. ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே அபிஷேக் சர்மா டக்-அவுட் ஆனார்.
ஹைதராபாத் அணியில் நிதிஷ் ரெட்டி 38 ரன்கள் எடுத்துப் போராடியபோதும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஹைதராபாத் அணி 19.2 ஓவர்களில் 196 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி அடுத்து குவாலிபையர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது. 15 வயதிலேயே ஜாம்பவான்களை வியக்க வைக்கும் வைபவ், ராஜஸ்தான் அணியின் வெற்றி நாயகனாக உருவெடுத்துள்ளார்.