பெல்பாஸ்ட்: அயர்லாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களான கேன் வில்லியம்சன் மற்றும் டாம் லாதம் ஆகியோர் 149 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை யாரும் நிகழ்த்தாத ஒரு மாபெரும் உலக சாதனையை படைத்துள்ளனர். இந்த சாதனை கிரிக்கெட் உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பெல்பாஸ்ட் நகரில் இன்று தொடங்கிய அயர்லாந்துக்கு எதிரான இந்தப் போட்டி, வில்லியம்சன் மற்றும் லாதம் இருவரும் அயர்லாந்து மண்ணில் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டியாகும். இதற்கு முன்னர், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜிம்பாப்வே என மொத்தம் 11 நாடுகளில் இவர்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர்.
தற்போது அயர்லாந்தையும் சேர்த்து, இவர்கள் விளையாடிய நாடுகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம், உலகின் 12 வெவ்வேறு நாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் இரண்டு வீரர்கள் என்ற அரிய பெருமையை இவர்கள் இருவரும் பெற்றுள்ளனர். இதற்கு முன்னர் ஷேன் வார்னே, ரிக்கி பாண்டிங், வக்கார் யூனிஸ் போன்ற பல ஜாம்பவான்கள் 11 நாடுகளில் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தப் போட்டியில் கேன் வில்லியம்சன் அரைசதம் அடித்தால், டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் 12 நாடுகளிலும் அரைசதம் அல்லது அதற்கு மேல் ரன்கள் குவித்த உலகின் முதல் வீரர் என்ற மற்றொரு வரலாற்றுச் சாதனையை அவர் படைப்பார். ஏற்கனவே மற்ற 11 நாடுகளிலும் அவர் அரைசதம் கடந்துள்ளார். அயர்லாந்தில் டெஸ்ட் விளையாடும் 4-வது அணி என்ற பெருமையை நியூசிலாந்து பெற்றுள்ள நிலையில், வில்லியம்சன் மற்றும் லாதம் ஆகியோரின் இந்த நீண்ட கால சாதனை கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.