இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் 0-2 எனத் தோல்வியடைந்த போதிலும், வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்படவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலும் அவர் பெஞ்சில் அமரவைக்கப்பட்டார். இதுகுறித்து சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நிகழ்ச்சியில் பேசிய ரவி சாஸ்திரி, 'அவர் அயர்லாந்துக்கு எதிரான தொடரிலேயே விளையாடியிருக்க வேண்டும். பெல்ஃபாஸ்ட்டின் மெதுவான ஆடுகளங்களில் அயர்லாந்து பந்துவீச்சை அவர் துவம்சம் செய்திருப்பார். அவனது அதிரடிக்கு அந்தச் சிறிய மைதானம் பந்து நேராக கூரைக்குச் சென்றிருக்கும். அவர்களின் பேன்ட்டை உருவி இருப்பார். அவர் அங்கு நிச்சயம் விளையாடி இருக்க வேண்டும். ஐபிஎல் தொடரில் அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களையும் வெளுத்து வாங்கிய அவனை ஏன் இன்னும் பெஞ்சில் உட்கார வைத்து அழகு பார்க்கிறீர்கள்?' என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.
வைபவ் சூர்யவன்ஷி அணியின் எக்ஸ்-ஃபேக்டர் என்றும், எந்தவொரு பயமும் இல்லாமல் விளையாடும் திறமை வாய்ந்தவர் என்றும் சாஸ்திரி குறிப்பிட்டார். முதல் 2 அல்லது 3 ஓவர்களிலேயே அதிரடியான தொடக்கத்தைத் தரக்கூடிய அவரால், அணியில் ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அண்மையில் நடைபெற்ற அண்டர்-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 175 ரன்கள் குவித்து இந்தியாவுக்குக் கோப்பையை வென்று தந்தவர் வைபவ் சூர்யவன்ஷி. மேலும், ஐபிஎல் 2026 தொடரில் 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் வென்ற மிகக் குறைந்த வயது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இருப்பினும், இந்திய அணி நிர்வாகம் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரையே தொடக்க வீரர்களாக களம் இறக்கி வருகிறது. இங்கிலாந்து தொடரில் இன்னும் 4 டி20 போட்டிகள் மீதமுள்ள நிலையில், வைபவ் சூர்யவன்ஷிக்கு விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.