இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி மற்றும் இளநிலை ஆய்வு உதவித்தொகை (JRF) பெறுவதற்கான தகுதியை நிர்ணயிக்கவும், Phd சேர்க்கைக்கான தகுதியை உறுதிப்படுத்தவும் யுஜிசி நெட் தேர்வு ஆண்டுதோறும் இருமுறை நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், ஆங்கிலம், வணிகவியல், மற்றும் சமூகவியல் பாடங்களுக்கான வினாத்தாள்களில் பல்வேறு குளறுபடிகள் கண்டறியப்பட்டதை அடுத்து, அந்த மூன்று பாடங்களுக்கு மீண்டும் மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.
நிபுணர் குழு நடத்திய ஆய்வில், வழங்கப்பட்ட தகவல்களில் தவறுகள், அச்சடிப்புப் பிழைகள், மொழிபெயர்ப்பு மற்றும் இலக்கணப் பிழைகள் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், முக்கிய அறிஞர்களின் பெயர்கள் மற்றும் புத்தகங்களின் பெயர்கள் விடுபட்டிருந்தன. கேள்விகளின் வாக்கிய அமைப்பில் தவறுகள், எண்களில் குளறுபடி, தெளிவில்லாத விடைகள், மற்றும் ஒரே கேள்விகள் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.
இத்தனை தவறுகள் இருப்பதால், சில கேள்விகளை மட்டும் நீக்கிவிட்டு மதிப்பெண் வழங்குவது சாத்தியமில்லை என்பதால் மறுதேர்வு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக என்டிஏ தெரிவித்துள்ளது. இதன்படி, செப்டம்பர் 9 அன்று காலை ஆங்கிலம் பாடத்திற்கும், அதேநாள் மதியம் வணிகவியல் பாடத்திற்கும் மறுதேர்வு நடைபெறும்.
மேலும், செப்டம்பர் 10 அன்று காலை சமூகவியல் பாடத்திற்கான மறுதேர்வு நடத்தப்படும் என்றும் என்டிஏ அறிவித்துள்ளது. காலை தேர்வு காலை 9:00 மணி முதல் 12:00 மணி வரையும், மதியம் தேர்வு பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையும் நடைபெறும்.
இந்த மறுதேர்வை எழுதும் மாணவர்களிடம் இருந்து எந்தவிதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது என தேசிய தேர்வு முகமை உறுதி செய்துள்ளது. இது மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தியாகும்.
மறுதேர்வு அறிவிக்கப்பட்ட மூன்று பாடங்களைத் தவிர்த்து, மீதமுள்ள 84 பாடங்களுக்கான தற்காலிக விடைக்குறிப்பை என்டிஏ ஏற்கனவே வெளியிட்டுள்ளது. மாணவர்கள் இந்த விடைக்குறிப்பு தொடர்பான தங்களின் ஆட்சேபனைகளை ஆகஸ்ட் 18 அன்று இரவு 11:59 மணி வரை பதிவு செய்யலாம்.
ஒரு கேள்விக்கு ஆட்சேபனை தெரிவிக்க ரூ.200 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அவகாசத்தைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
