திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீர் மற்றும் இரை தேடி வனவிலங்குகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி வருகின்றன. இந்நிலையில், பொள்ளாச்சியை அடுத்த சர்க்கார்பதி அருகே காண்டூர் கால்வாயில் தண்ணீர் குடிக்க வந்த ஆண் யானை ஒன்று எதிர்பாராதவிதமாக கால்வாய்க்குள் தவறி விழுந்தது. கால்வாயில் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால், யானையால் வெளியேற முடியாமல் தத்தளித்து, நீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது.
பின்னர், யானையின் உடல் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த உடுமலை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் கயிறு கட்டி யானையின் உடலை மீட்டனர். கால்நடை மருத்துவர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.
பிரேத பரிசோதனையில், உயிரிழந்தது சுமார் 45 வயதுடைய ஆண் யானை என்பதும், இது கேரள மாநில வனப்பகுதியில் இருந்து வந்த 'சில்லி கொம்பன்' என்றழைக்கப்படும் யானை என்பதும் தெரியவந்தது. இந்த யானை வனப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுடன் இயல்பாக பழகி வந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, யானையின் உடல் திருமூர்த்தி அணை அருகே குழி தோண்டி புதைக்கப்பட்டது.
காண்டூர் கால்வாய் புதுப்பிக்கப்பட்ட பிறகு, வனவிலங்குகள் அடிக்கடி கால்வாயில் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்வதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, கால்வாய் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தவும், ரோந்து பணிகளை அதிகரிக்கவும், இதன் மூலம் வனவிலங்குகளை உயிருடன் மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.