கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் அரசுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கை அடிபம்பு, பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் சாலைக்குள் புதைந்துவிட்டது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சேத்தியாதோப்பு பேரூராட்சிக்குட்பட்ட வடக்கு சென்னிநத்தம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மின்வெட்டு அல்லது அவசர காலங்களில் மாற்று ஏற்பாடாக, அரசுக்கு சொந்தமான இடத்தில் கை அடிபம்பு அமைக்கப்பட்டு, அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்தால் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த கை அடிபம்பின் பாதி பகுதியை சாலைக்கு அடியில் புதைத்து, அதன் மேல் சாலை அமைக்கும் பணி நடந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சாலை அமைக்கப்பட்டதால், அடிபம்பை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'அவசர காலங்களில் குடிநீர் பெறுவதற்கு இந்த அடிபம்பு மிகவும் உதவியாக இருந்தது. ஆனால், பேரூராட்சி நிர்வாகம் சாலை அமைக்கும்போது இதை கவனிக்காமல், பாதி அடிபம்பை புதைத்துவிட்டது. இதனால், நாங்கள் தற்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, இந்த அடிபம்பை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.