மேற்கு வங்க மாநிலத்தில், பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக அமோக வெற்றி பெற்று சுவேந்து அதிகாரி முதல்வராகப் பதவியேற்றார். அதன் பின்னர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு பேருந்துகளில், குறைந்த தூரம் மற்றும் நீண்ட தூரம் செல்லும் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு, அவர்களின் போக்குவரத்து வசதியும் மேம்படுத்தப்படும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இலவச பயணத்திற்காக பெண்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும். இந்த கார்டுகளைப் பெற, அவரவர் பகுதிகளில் உள்ள பிடிஓ அல்லது எஸ்டிஓ அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பெண்ணின் புகைப்படம் மற்றும் பெயர் அடங்கிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
இந்த ஸ்மார்ட் கார்டைப் பயன்படுத்தி மாநிலம் முழுவதும் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம். கார்டு பெற ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். ஸ்மார்ட் கார்டு கிடைக்கும் வரை, தற்காலிகமாக பெண்கள் தங்கள் அடையாள அட்டைகளைக் காட்டி இலவசமாகப் பயணிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.