தற்போதைய ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் ஜோக்கர்கள் என்றும், முதலமைச்சருக்கே சட்டமன்ற உறுப்பினர்கள் யார் என்பது தெரியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திமுக வடக்கு மண்டல வழக்கறிஞர் அணி நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய அவர், புதிய கோஷ்டி தட்டுத்தடுமாறி ஆட்சிக்கு வந்துள்ளதாகவும், அதில் உள்ள அனைவரும் ஜோக்கர்களாகவே திகழ்வதாகவும் குறிப்பிட்டார். அமைச்சர்களுக்கு லாட்டரி அமைச்சர், பிளாக் டிக்கெட் விற்றவர், திருட்டு விசிடி விற்றவர், உருட்டுக்கட்டை அமைச்சர், பவுடர் அமைச்சர், சங்கி அமைச்சர் போன்ற அடைமொழிகள் சொன்னால்தான் மக்களுக்குப் புரியும் நிலையில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், யார் அமைச்சர்கள், யார் சட்டமன்ற உறுப்பினர்கள் என்பதே மக்களுக்குத் தெரியவில்லை என்றும், ஒரு துறை குறித்து சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால், சம்பந்தமில்லாத மற்றொரு அமைச்சர் பதிலளிப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார். 'நாம் ஒரு கேள்வி கேட்டால், நம்மை அசரவைக்கும்படி ஒரு பதில் சொல்வார்கள்' என்ற நகைச்சுவைதான் நினைவுக்கு வருவதாகவும் அவர் கூறினார்.
மாற்றம் மற்றும் தூய்மையான அரசு அமைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக, தற்போது திராவிட மாடல் ஆட்சியில் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களின் பெயர்களை மாற்றி, புதிய ஸ்டிக்கர்களை ஒட்டி வருவதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார். அரசு வழக்கறிஞர் நியமனத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், இதுகுறித்து ஆளும்கட்சி நிர்வாகியே நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
'மாற்றம்' எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது கல்லா கட்ட ஆரம்பித்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், இந்த ஊழல்களை ஆதாரத்தோடு வெளிக்கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
