திருவாரூர் மாவட்டத்தில், அரசு மேல்நிலைப் பள்ளியில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய தவெக நிர்வாகியின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்ட தவெக துணைச் செயலாளர் அகிலன், தனது பிறந்தநாளை இடும்பாவனம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தனது கட்சி நிர்வாகிகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மேலும், அகிலன் தனது கட்சி நிர்வாகிகளுடன் முத்துப்பேட்டை ஒன்றியம், குன்னலூர் ஊராட்சி, எக்கல் பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்குச் சென்று, அங்குள்ள குடிநீர் வசதி மற்றும் கட்டிடப் பராமரிப்பு நிலையை ஆய்வு செய்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதியாகவோ அல்லது அரசு அதிகாரியாகவோ இல்லாத நிலையில், அவர் பள்ளியை ஆய்வு செய்தது சட்டப்படி தவறானது என்றும், இது பள்ளியின் மாண்பைக் குறைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்தச் சம்பவம், பொது இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் புனிதத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசியல் கட்சியினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பள்ளி வளாகத்தில் பிறந்தநாள் கொண்டாடியது மாணவர்களின் கல்விச் சூழலுக்கு உகந்ததல்ல என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அரசுப் பள்ளியின் வளாகத்தில் அரசியல் கட்சியினர் இதுபோன்று செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்றும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, சம்பந்தப்பட்ட தவெக நிர்வாகி அகிலன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.