திருநெல்வேலி மண்டல போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு முன்பு, டிக்கெட் மோசடியில் ஈடுபட்டதாக உயர் அதிகாரிகள் மீது பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த முறைகேட்டில், பேருந்து நடத்துனர்களுக்கு பல செட் டிக்கெட்டுகளை வழங்குமாறு கட்டாயப்படுத்தி, அரசுப் பொதுப் பணத்தை பெருமளவில் முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பேருந்துகள் இயங்குவதற்கான செயல்பாட்டுச் செலவுகள் மற்றும் டிக்கெட் வருவாயைப் போலி கணக்குகள் மூலம் காட்டி, இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது. பேருந்துகள் இயங்காத நாட்களிலும், அதற்கான டிக்கெட் புத்தகங்கள் மற்றும் எண்கள் தயார் செய்யப்பட்டு, அரசுப் பணம் மற்றும் டீசல் நிதிகள் முறைகேடாகச் சுருட்டப்பட்டதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் மின்னணு இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்கும் முறை செயல்பாட்டுக்கு வந்தது. அதற்கு முன்பாக இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துவிடக்கூடாது என்ற அச்சத்தில், பிப்ரவரி 2 ஆம் தேதி நெல்லை போக்குவரத்து மண்டல அலுவலகத்தில் இருந்து இரண்டு லாரிகளில் டிக்கெட் பண்டல்கள் ஏற்றிக்கொண்டு பாபநாசம் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
அங்கு, குறிப்பிட்ட சில அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், அந்த டிக்கெட்டுகள் அனைத்தும் எரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்தது முழுவதுமாக மறைக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தற்போது, விசாரணைக்கு பயந்து, இந்த மோசடியை மூடி மறைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த டிக்கெட் மோசடி தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, தவறிழைத்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர். அரசு உடனடியாக இதில் தலையிட்டு, நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
