தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர்களின் மருத்துவக் காப்பீட்டுத் தொகை ₹5 லட்சத்திலிருந்து ₹7.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிதித்துறை செயலர் சித்திக் புதிய அரசாணையை வெளியிட்டுள்ளார். இந்த புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஜூலை 1, 2024 முதல் 2031 ஜூன் 30 வரை அமலில் இருக்கும்.
தற்போது நடைமுறையில் உள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில், 'யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்' நிறுவனம் தொடர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்தும் என அரசு தெரிவித்துள்ளது. ஒரு அரசு ஊழியருக்கு ஆண்டுக்கு ₹4,500 பிரீமியத்தை அரசு இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு செலுத்தும். ஊழியரின் மாத சம்பளத்தில் இருந்து ₹390 பிடித்தம் செய்யப்படும். நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மேல் வரும் கூடுதல் பிரீமியத்தை அரசே ஏற்கும்.
மேலும், அரசு ஊழியர்களுக்கான 'கார்பஸ்' நிதியின் கீழ், அவர்களின் குடும்பத்தினர் ஆண்டுக்கு ₹27 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு பெறலாம். துப்புரவு பணியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் போன்றோருக்கு ₹10,000-க்கும் கீழ் சம்பளம் இருந்தால், அவர்களுக்கான பிரீமியத்தை அரசே ஏற்கும்.
ஓய்வூதியர்களுக்கு ஆண்டுக்கு ₹7,728 அரசு பிரீமியமாகச் செலுத்தும். ஓய்வூதியர்களிடமிருந்து மாதம் ₹644, ஜூலை மாத ஓய்வூதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். ஓய்வூதிய துப்புரவு பணியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் போன்ற சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோர், முதல்வர் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் இணைக்கப்படுவார்கள். இவர்களிடமிருந்து பணம் பிடித்தம் செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.