விருதுநகர் அருகே அரசு பேருந்தில் போல்ட் நட் கழண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டுநரின் சமயோசித செயலால் 50க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பாபநாசத்தில் இருந்து மதுரை நோக்கி நேற்று காலை 6 மணியளவில் அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. டிஎன் 72-2003 என்ற எண்ணைக் கொண்ட இந்த பேருந்து, சுரண்டை, சங்கரன்கோவில், சிவகாசி, விருதுநகர் வழியாக சென்று கொண்டிருந்தது. நேற்று மதியம் 12.45 மணியளவில், விருதுநகர் போக்குவரத்து பணிமனையை தாண்டி சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் நான்கு வழிச்சாலையில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது, திடீரென ஒரு சத்தம் கேட்டது. ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்த முயன்றார். மீண்டும் சத்தம் கேட்டதால், பேருந்தை உடனடியாக நிறுத்தினார். அப்போது, பேருந்தின் முன்பக்க இடது புற சக்கரத்தில் இருந்த ஐந்து போல்ட் நட்டுகளும் கழன்று கிடந்தது தெரியவந்தது. மூன்று போல்ட் நட்டுகள் பேருந்து நிறுத்தப்பட்ட இடத்திலும், மேலும் இரண்டு மூன்று போல்ட் நட்டுகள் சுமார் 100 அடி தொலைவிலும் கிடந்துள்ளன.
பேருந்து ஓட்டுநர் சமயோசிதமாக செயல்பட்டு உடனடியாக பேருந்தை நிறுத்தியதால், 50க்கும் மேற்பட்ட பயணிகள் பெரும் விபத்தில் இருந்து உயிர் தப்பினர். ஒருவேளை சக்கரம் கழன்றிருந்தால், பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து பெரிய விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. நான்கு வழிச்சாலையில் பேருந்து சென்று கொண்டிருக்கும்போது இப்படி ஒரு சம்பவம் நடந்தது பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பைபாஸ் சாலையில் செல்லும் பேருந்துகளில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களின் தரம் குறித்து இந்த சம்பவம் கேள்வி எழுப்பியுள்ளது. போக்குவரத்து துறையில் தரமற்ற உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படுவதால்தான் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். இது உயிரிழப்புகளையும் ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்தனர். எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு, தரமான உதிரி பாகங்கள் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தொலைதூர வழித்தடங்களுக்கு நல்ல நிலையில் உள்ள பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அலட்சியம் தொடர்ந்தால், அரசு பேருந்துகள் விபத்தில் சிக்கி பெரும் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் எச்சரித்துள்ளனர்.