ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து, தமிழக முதலமைச்சர் விஜய், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ், அந்தோணி ராஜன், சந்தான அலோசியஸ், அருள் தே பிரிட்டோ, ஆல்பர்ட் மற்றும் சகாய செல்வசானு ஆகிய ஆறு மீனவர்கள் நேற்று முன்தினம் நாட்டுப்படகில் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றதாகவும், அவர்கள் சர்வதேச எல்லையைக் கடந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளதாகவும் முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கை கடற்படையினரால் ஏற்கனவே 54 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறைகளில் உள்ளதையும், 264 படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, இப்பிரச்சினை குறித்து இலங்கை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, உரிய தூதரக நடவடிக்கைகளின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக மீட்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்வதாகவும் முதலமைச்சர் விஜய் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
