தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதிநிலை குறித்த விரிவான வெள்ளை அறிக்கை இன்று (25.06.2026) காலை 10.30 மணியளவில் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. இதில் உள்கட்டமைப்பு, நிதி, மனிதவளம், தளவாடப் பொருட்கள், நடைபெற்று வரும் திட்டப்பணிகள், வருவாய் மற்றும் செலவினங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்சாரத் துறையில் நடந்த செயல்பாடுகள், டிரான்ஸ்பார்மர் கொள்முதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் மின்வாரியத்தில் சுமார் 9136 பேர் பணி ஓய்வு பெற்ற நிலையில், வெறும் 343 பேர் மட்டுமே புதிதாக பணியில் எடுக்கப்பட்டுள்ளனர் என்றும், இதனால் 65,921 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
வெள்ளை அறிக்கையின்படி, மின்மின்துறையின் கடன் தற்போது ரூ. 2,47,130 கோடியாக உயர்ந்துள்ளது. 2001-2006 காலகட்டத்தில் வருவாய் 59,084 கோடியாகவும், செலவு 67,439 கோடியாகவும் இருந்து, 8,355 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டும், பற்றாக்குறை 933 கோடியாக இருந்த நிலையில், புதிய திட்டங்கள் இல்லாமலேயே செலவு அதிகரித்து, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 34,447 கோடி மின்வாரியத்தில் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் நிர்மல் குமார் விளக்கினார்.
மேலும், 2001 இல் 6,492 கோடியாக இருந்த மின் துறையின் கடன் தற்போது 2,47,130 கோடியாக உயர்ந்திருப்பதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 87,000 கோடி ரூபாயை கடனாக வாங்கியிருப்பதாகவும் அவர் கூறினார். மின் துறைக்கு 1,40,635 ஊழியர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது 74,714 பேர் மட்டுமே பணியில் இருப்பதாகவும், இன்னும் 5 ஆண்டுகளில் 16,000 பேர் ஓய்வு பெறவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.