கோடை விடுமுறை காலம் என்பதால், திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், சாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, பக்தர்களின் தரிசன நேரத்தை குறைக்க தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நவீன தொழில்நுட்பம் மற்றும் ஒருங்கிணைந்த கட்டளை கட்டுப்பாட்டு மையம் மூலம் தரிசன முறைகளில் புரட்சிகரமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் விளைவாக, முன்பு 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய 18 முதல் 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், தற்போது அதே எண்ணிக்கையிலான பக்தர்கள் சுமார் 8 மணி நேரத்திற்குள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2-ம் தேதி 91,005 பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர். அவர்களுக்கு 12 மணி நேரத்திற்குள் தரிசனம் வழங்கப்பட்டது. இந்த விரைவான தரிசன ஏற்பாடுகளால் 65 சதவீத பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தரிசனம் விரைவாக முடிவதால் பக்தர்கள் தங்கள் அறைகளை உடனடியாக காலி செய்வதால், புதிய பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்குவதில் சிரமம் இல்லை என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 78,024 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில் 36,826 பக்தர்கள் தங்களின் மொட்டையை காணிக்கையாக செலுத்தினர். உண்டியலில் ரூ.3.85 கோடி வசூலானது. இன்றும் நேரடி இலவச தரிசனத்திற்காக காத்திருந்த அனைத்து அறைகளும் நிரம்பி வழிந்தன. அறைகளுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், சுமார் 15 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.