பிரதமர் நரேந்திர மோடியின் அந்நிய செலாவணி கையிருப்பு குறித்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்தியாவின் தங்க நுகர்வில் பெரும்பகுதி இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுவதால், அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்கும் நோக்கில், ஒரு ஆண்டுக்கு தங்கத்தை வாங்குவதை தவிர்க்குமாறு பிரதமர் மோடி மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். இந்த வரி உயர்வு, நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கவும், வெளிநாட்டு கொள்முதலை கட்டுப்படுத்தவும் எடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.
இந்த திடீர் வரி உயர்வு, உலகின் இரண்டாவது பெரிய தங்க மற்றும் வெள்ளி நுகர்வோரான இந்தியாவில் இவற்றின் தேவையை குறைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், வர்த்தக பற்றாக்குறையை குறைக்கவும், ஆசியாவில் மோசமாக செயல்படும் நாணயங்களில் ஒன்றான இந்திய ரூபாய்க்கு ஆதரவளிக்கவும் இந்த நடவடிக்கை உதவும்.
இருப்பினும், தொழில் துறையினர் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2024 ஆம் ஆண்டின் மத்தியில் இந்தியாவில் வரிகள் குறைக்கப்பட்ட பிறகு தங்கக் கடத்தல் தணிந்திருந்த நிலையில், தற்போதைய வரி உயர்வு மீண்டும் தங்கக் கடத்தலை தூண்டக்கூடும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
தற்போது, தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி மீது 10% அடிப்படை சுங்க வரியும், 5% வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டும் சேர்ந்து மொத்த இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது.