ஸ்ரீவைகுண்டத்தில் முதல்-அமைச்சர் விஜயின் ரசிகை ஒருவர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், 'உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதல்-அமைச்சர்க்கு அக்கறை இருக்கிறதா?' என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு பெண்ணை காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி வேலை வாங்கித் தருவதாக எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். இதேபோல், மற்றொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளிகள் 'எல்லாம் மேலிடத்துக்கு தெரியும்' என்று கூறியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சியில் 'யார் அந்த மேலிடம்' என்று மக்கள் கேள்வி எழுப்புவதாக உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடம் எடுக்கும் முதல்-அமைச்சர், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். குற்றம் செய்தவர்களைப் பாதுகாத்தது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியிலிருந்தும் நீக்கியுள்ளனர்.
'பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது – பதறுகிறது' என்று இரண்டு நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் பேசியதை சுட்டிக்காட்டிய உதயநிதி, தன் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ரீல்ஸ் எடுத்து போஸ்ட் செய்யத்தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதல்-அமைச்சர் உருவாக்கினாரா என்றும் அவர் கேட்டுள்ளார். ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும், அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.