டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி தனது 12 ஆண்டுகால பிரதமர் பதவிக்காலம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார். இந்த கூட்டத்தில் 22 மாநில முதலமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், 'கோடான கோடி நாட்டு மக்களுக்கு தலை வணங்குகிறேன். இவ்வளவு நீண்ட காலம் பிரதமராக இருப்பேன் என நான் கற்பனை கூட செய்ததில்லை. இந்த பயணத்தில் என்னுடன் பங்கெடுத்த அனைத்து சக ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர், 'இந்த நீண்ட பயணத்தை நான் எனது தனிப்பட்ட சாதனையாகக் கருதவில்லை. இது நமது கூட்டு முயற்சி மற்றும் ஒவ்வொரு என்.டி.ஏ கூட்டணிக் கட்சியின் பகிரப்பட்ட வெற்றி. எனவே இந்த அங்கீகாரத்தை நமது என்.டி.ஏ குடும்பத்தின் ஒவ்வொரு தொண்டருக்கும், குறிப்பாக பா.ஜ.க தொண்டர்களுக்கும் நான் அர்ப்பணிக்கிறேன்' என தெரிவித்தார்.
'இந்த அரசு மேற்கொள்ளும் சீர்திருத்தங்களை மக்கள் அங்கீகரிக்கின்றனர். யுபிஐ பயன்பாடு, கொரோனா காலத்தை எதிர்கொள்வதில் அரசின் முயற்சிகளுக்கு மக்கள் சிறந்த முறையில் ஆதரவளித்தனர். மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம். நாட்டின் வளர்ச்சிக்காக உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் கோருகிறேன்' என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.