தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 'நான் முதல்வன்' திட்டத்தின் பெயர் தற்போது 'திறன் தமிழ்நாடு' என மாற்றப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்றம் மற்றும் இது தொடர்பான பழைய பதிவுகள், வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.
முன்னதாக, இளைஞர் நலத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கான தனிப் பிரிவை தொடங்கி வைத்தார். மத்திய அரசு வேலைவாய்ப்புகளை தமிழக இளைஞர்கள் எளிதாகப் பெறும் நோக்கில், இந்தப் பிரிவு பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வந்தது. மத்திய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கிப் பணி போன்ற தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெற, தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000 பேருக்கு 6 மாத கால பயிற்சி, உணவு மற்றும் தங்குமிட வசதியுடன் அளிக்கப்பட்டது.
தற்போது ஆளும் தவெக அரசு, இந்த திட்டத்தை 'திறன் தமிழ்நாடு' (TNSKILL CORPORATION) என பெயர் மாற்றம் செய்துள்ளது. இந்த திடீர் பெயர் மாற்றம் மற்றும் பழைய பதிவுகள், வீடியோக்கள் நீக்கப்பட்டிருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சியில் மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கும் வேலைவாய்ப்பிற்கும் பெரும் உதவியாக இருந்த 'நான் முதல்வன்' திட்டத்தின் பெயர் மாற்றத்தால், அதன் தொடர்ச்சி மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. புதிய பெயரில் திட்டம் எவ்வாறு செயல்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.