திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஒரு தம்பதிக்கு வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த மூன்று குழந்தைகளும் ஒரே தேதியில் பிறந்துள்ளனர். இது ஒரு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த மூன்று குழந்தைகளின் பிறப்பின் போதும் ஒரே மருத்துவர் தான் பிரசவம் பார்த்துள்ளார். அந்த மருத்துவரின் பிறந்த தேதியும் இதே நாள் என்பது மேலும் அதிசயமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
பாளையங்கோட்டையைச் சேர்ந்த மதபோதகர் ஜெபர்சன் மற்றும் அவரது மனைவி சீபா மனோஸ் தம்பதிக்கு ஜஹஸ்லேல் மனோஸ், ஜசானியா ஷரோன் மற்றும் ஜானியா செராபின் என மூன்று குழந்தைகள் உள்ளனர். மூத்த மகன் 2015-லும், இரண்டாவது மகள் 2017-லும், மூன்றாவது மகள் 2025-லும் பிறந்தனர். சுவாரஸ்யமாக, மூன்று குழந்தைகளும் ஜூன் 10-ஆம் தேதியன்று பிறந்துள்ளனர். இவர்களின் பிறப்பில் மற்றொரு வியப்பூட்டும் ஒற்றுமையும் உள்ளது. மூன்று குழந்தைகளும் பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் உள்ள ஒரே தனியார் நர்சிங் ஹோமில் பிறந்துள்ளனர்.
இந்த மூன்று குழந்தைகளின் பிரசவத்தையும் பார்த்த டாக்டர் ரமோலாஜேனட் டயானாவும் ஜூன் 10-ஆம் தேதியே பிறந்தவர் என்பது கூடுதல் சுவாரஸ்யம். பத்து ஆண்டுகள் கால இடைவெளி இருந்தாலும், மருத்துவர், மருத்துவமனை மற்றும் பிறந்த நாள் ஆகிய மூன்றும் மாறாமல் இருப்பது அபூர்வ நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்த அதிசய நிகழ்வை உலக சாதனையாகப் பதிவு செய்ய யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் பியூச்சர் கலாம்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்புகளிடம் விண்ணப்பிக்கப்பட்டது.
ஆவணங்களை ஆய்வு செய்த அமைப்புகள், 'ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அதிகபட்ச உடன்பிறப்புகள் ஒரே நாளில், ஒரே மருத்துவமனையில், ஒரே மருத்துவரால் சுகப்பிரசவம் மூலம் பிறந்து சாதனை' என்ற தலைப்பில் உலக சாதனைக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இதற்கான நேரடி உறுதிப்படுத்துதல் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி வருகிற 15-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.