திருவண்ணாமலை கோயில் நேர்முகத் தேர்வு ரத்து: அமைச்சர் உத்தரவு

திருச்செந்தூரைத் தொடர்ந்து திருவண்ணாமலை கோயிலிலும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், பல்வேறு கோயில்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்ற அவர், பக்தர்களை சிறப்பு தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பணம் வாங்கியவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து நடவடிக்கை எடுத்தார். இந்த நிலையில், திருவண்ணாமலை கோயில் பணி தொடர்பாக திமுக ஆட்சியில் நடைபெற்ற 109 பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு தேர்வு செய்ததாகப் புகார் எழுந்தது. எனவே, மீண்டும் நேர்மையாக நேர்காணல் நடத்தி பணியிடங்களை நிரப்ப அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியான செய்திக்குறிப்பின்படி, திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் அங்கீகரிக்கப்பட்ட 466 பணியிடங்கள் அடங்கிய ஒருங்கிணைந்த பணியாளர் பணித்தொகுதி பட்டியலில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இதர பணியிடங்கள் 39 மற்றும் காவலர் பணியிடங்கள் 70 என மொத்தம் 109 பணியிடங்களுக்கு விளம்பரம் செய்து நியமனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது மேற்படி திருக்கோயிலில் அறங்காவலர் குழு பதவி காலம் முடிவடைந்துள்ளதாலும், நிர்வாக காரணங்களின் அடிப்படையிலும், மேற்படி திருக்கோயிலில் 109 காலிப் பணியிடங்களை நிரப்ப பார்வை குறிப்பின் மூலம் வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்து உத்தரவிடப்படுகிறது.

லஞ்சம் புகாரால் நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது பக்தர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. மீண்டும் வெளிப்படையான முறையில் நேர்காணல் நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version