திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.
ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தனர். பகலில் வெயில் சுட்டெரித்த போதும், பக்தர்கள் நீண்ட வரிசையில் பொறுமையுடன் காத்திருந்தனர்.
பக்தர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, கோவில் நிர்வாகம் சார்பில் தண்ணீர் மற்றும் மோர் வழங்கப்பட்டது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக 24 மணி நேரமும் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். ஆனால் நேற்று பகலில் வெயில் அதிகமாக இருந்ததால், கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. மாலை மற்றும் இரவு நேரங்களில் கிரிவலம் சென்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.