சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், தனது சொந்த பாணியில் அணியை வழிநடத்த முழு சுதந்திரம் உண்டு என ஜாம்பவான் எம்.எஸ். தோனி தெரிவித்துள்ளார். தோனி தனது அனுபவ ஆலோசனைகளை வழங்கினாலும், அதை அப்படியே பின்பற்ற வேண்டிய கட்டாயம் ருதுராஜுக்கு இல்லை என்பதை அவர் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார். இது, 2026 ஐபிஎல் தொடரின் மிக முக்கிய கட்டத்தில் சிஎஸ்கே அணி உள்ள நிலையில், ருதுராஜின் கேப்டன்சிக்கு தோனி அளிக்கும் ஒரு பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
'சிஎஸ்கே அணியை உனக்கு எப்படி விருப்பமோ அப்படி நடத்து. நான் நீண்ட காலமாக இந்த அணியை அப்படித்தான் நடத்தினேன். கிரிக்கெட்டில் எப்போதும் கேப்டன் தான் களத்தில் இறுதி முடிவுகளை எடுக்க வேண்டும். இது கால்பந்து கிடையாது, அங்கே பயிற்சியாளர் அல்லது மேலாளர் முடிவெடுப்பார்கள். ஆனால் கிரிக்கெட்டில் மைதானத்தில் இருக்கும் கேப்டன் எடுக்கும் முடிவு தான் இறுதியானது' என்று தோனி ருதுராஜிடம் கூறியதாகத் தெரிகிறது.
மேலும் அவர், 'நான் உன்னிடம் வந்து பேசுவேன், பல ஆலோசனைகளை வழங்குவேன். ஆனால் அதில் ஒன்றைக்கூட நீ பின்பற்றவில்லை என்றாலும் எனக்குக் கவலையில்லை. அது உன் உரிமை. ஒரு கேப்டனாக உன்னிடம் உள்ள வீரர்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது உனக்குத் தான் தெரியும். நான் உனக்கு 10 விஷயங்களைச் சொன்னால், அதில் உனக்குச் சரி எனப் படுவதை மட்டும் எடுத்துக்கொள். எதையும் கட்டாயமாகச் செய்ய வேண்டாம்' என்று தனது ஆலோசனைகளைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
தனது புகழ் குறித்துப் பேசிய தோனி, 'நான் எப்போதும் ரசிகர்களைக் கவர வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டதில்லை. நான் எப்போதும் உண்மையாக இருக்க வேண்டும் என்று மட்டுமே விரும்பினேன். அந்த உண்மைத் தன்மை தான் ரசிகர்களை நம் மீது அன்பு செலுத்த வைக்கிறது. சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை கிரிக்கெட்டுக்கு மட்டுமே எப்போதும் முதல் முன்னுரிமை. விளையாட்டில் இருந்து விலகாமல் இருப்பதே அணியின் பலம்' என்றார்.
இக்கட்டான நேரங்களில் ரசிகர்கள் மைதானத்தில் அளிக்கும் உற்சாகம், வீரர்களுக்கு 10 முதல் 15 சதவீதம் கூடுதல் பலத்தைத் தருவதாகவும் தோனி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். பிளே-ஆப் வாய்ப்புக்காகச் சென்னை அணி போராடி வரும் நிலையில், தோனியின் இந்த முதிர்ச்சியான பேச்சு ருதுராஜ் மற்றும் சிஎஸ்கே வீரர்களுக்குப் புதிய தன்னம்பிக்கையை அளித்துள்ளது.