இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்திற்கு மருத்துவத் தகுதிச் சான்றிதழ் பெறச் சென்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக அவர் இந்தச் சான்றிதழைப் பெறுகிறார். கடந்த ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தசைநார் காயம் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரிலிருந்து விலகியிருந்த கோலி, தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான அணியில் இடம் பெற்றுள்ளார். அவரது பங்கேற்பு உடற்தகுதியைப் பொறுத்தே அமையும்.
பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் கோலி உடற்தகுதியை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவர் அங்கு வந்திருப்பது இளம் வீரர்களுக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது. பயிற்சி பெற்று வரும் சக வீரர்கள் கோலியை ஆர்வத்துடன் சந்தித்து உரையாடியதுடன், அவருடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
குறிப்பாக, இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை வென்ற அணியின் கேப்டனும், சிஎஸ்கே வீரருமான ஆயுஷ் மத்ரே, கோலியைச் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். 'ஒரு ஜாம்பவானுடன் மறக்க முடியாத உரையாடல்' என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் 2026 தொடரில் விளையாடிய ஆயுஷ் மத்ரே, காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினாலும், 6 இன்னிங்ஸ்களில் 201 ரன்களை 33.50 சராசரியுடன் குவித்திருந்தார். இதில் இரண்டு அரைசதங்களும் அடங்கும். மும்பையைச் சேர்ந்த இவர், உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 7 போட்டிகளில் 458 ரன்களும், டி20 போட்டிகளில் 19 போட்டிகளில் 766 ரன்களும் குவித்துள்ளார். மேலும், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் 214 ரன்கள் மற்றும் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.