தமிழக முதலமைச்சர் விஜய், வேளச்சேரியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்தார். முதல்வரை திருமாவளவன் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றார். வாசலுக்கே சென்று முதல்-அமைச்சர் விஜய்யை வரவேற்ற திருமாவளவன், அவருக்கு பொன்னாடை அணிவித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புப் பக்கத்தை முதல்-அமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் வழங்கினார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், 'பெரும்பான்மை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதற்கு முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தேன். எதிர்க்கட்சித் தலைவர்கள் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினை முதல்வர் சந்தித்ததை நான் குறிப்பிட்டு பாராட்டினேன். முதல்-அமைச்சர் விஜய்யின் இந்த அணுகுமுறை தமிழக அரசியல் களத்திற்குப் புதியது; இது மிகவும் பாராட்டத்தக்கது. ராதன் பண்டிட் கட்சிப் பொறுப்பின் அடிப்படையில் அரசுப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்' என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், 'அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இயங்குகிறது என்று நாங்கள் கருதுகிறோம். அவரது தலைமையிலான குழுவில்தான் கொறடா இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க வேண்டும் என்று முதல்வரிடம் கூறினோம். அவரைச் சந்திப்பதாக முதல்வர் விஜய் என்னிடம் உறுதி அளித்தார். அதிமுகவில் நடக்கும் உட்கட்சிப் பிரச்சினை குறித்து நான் கருத்து கூற முடியாது. எஸ்.பி. வேலுமணி தரப்பினர் அளிக்கும் வாக்குகள் செல்லுமா என்பதை சபாநாயகர் தான் முடிவெடுப்பார்' என்று திருமாவளவன் தெரிவித்தார்.