இந்தியாவின் ஹைதராபாத்தில் டெஸ்லா நிறுவனம் தனது முதல் பிரத்யேக எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வாடிக்கையாளர் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது. ஹைடெக் சிட்டியின் நாலெட்ஜ் சிட்டி பகுதியில் இந்த புதிய மையம் அமைந்துள்ளது.
இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் இந்த புதிய மையத்தின் திறப்பு விழாவோடு, சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள தனது புதிய ‘மாடல் ஒய்’ காரின் கூடுதல் வேரியண்டுகளையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் மூலம், வாடிக்கையாளர்கள் டெஸ்லாவின் அதிநவீன மின்சார வாகனங்களின் உலகத்தரம் வாய்ந்த வடிவமைப்பு, சொகுசு வசதிகள், ஓட்டுநர் உதவித் தொழில்நுட்பங்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்களை நேரில் கண்டு, தொட்டுணர்ந்து தங்களின் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள ஒரு சிறப்பான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மையங்களில் ஒன்றான ஹைதராபாத்தில் இந்த முதலாவது மையத்தைத் தொடங்கியதன் மூலம், நாட்டில் அதிகரித்து வரும் பிரீமியம் ரக மின்சார வாகனங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்யவும், தனது வணிகத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.