தமிழகத்தின் உள் பகுதிகளில் வரும் மே 30ஆம் தேதி வரை வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி வி.ஆர்.துரை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சில இடங்களில் மழை பதிவாகியுள்ளது. வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் 8 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் கக்கதாசத்தில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது.
தற்போது, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, கோயம்புத்தூர், திருப்பூர் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 26) இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.
மே 27 முதல் மே 31 வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழக பகுதிகளில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். மே 29 வரை அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக கடலோர தமிழகத்தில் அசவுகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 41 டிகிரி செல்சியஸாக இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக, மே 30ஆம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
