அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாக, அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய மூன்று எம்எல்ஏக்கள் தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி. பிரபாகரை சந்தித்து ராஜினாமா கடிதங்களை அளித்தனர். அவர்களின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் தவெகவில் இணைந்தனர். இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, இசக்கி சுப்பையா தனது ராஜினாமா கடிதத்தை இன்று அளித்துள்ளார்.
இசக்கி சுப்பையா தனது ராஜினாமா கடிதத்தை டைப் செய்து கொண்டு வந்ததால், முதலில் சபாநாயகர் ஜேசிடி. பிரபாகர் அதை ஏற்க மறுத்துள்ளார். பின்னர் அவர் கைப்பட எழுதி கொடுத்த கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அவர் தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இசக்கி சுப்பையா இதற்கு முன்னர் 2011 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். மேலும், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
அதிமுக எம்எல்ஏக்களின் பதவி விலகலை சபாநாயகர் ஏற்றதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இசக்கி சுப்பையாவைத் தொடர்ந்து மேலும் சில அதிமுக எம்எல்ஏக்கள் தவெக பக்கம் சாயக்கூடும் என்றும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதற்கிடையில், தவெக தமிழ்நாட்டில் கீழ்த்தரமான அரசியலையும், குதிரை பேர கலாச்சாரத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், 'தூயசக்தி' என்று கூறிக்கொண்டவர்கள் 'துயரசக்தி'யாக அம்பலப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். 'இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டுமா சி.எம் சார்?' என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.