சென்னை: தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய இந்தப் படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
‘கருப்பு’ திரைப்படம் உலகளவில் ரூ.207 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலித்ததாக படக்குழு மேலும் அறிவித்துள்ளது. இந்தப் படம் விரைவில் ரூ. 300 கோடியைக் கடந்து, சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகச்சிறந்த வசூல் செய்த திரைப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்திற்குக் கிடைத்துவரும் வரவேற்பைத் தொடர்ந்து, ஆர்.ஜே. பாலாஜி பல்வேறு ஊர்களுக்குச் சென்று திரையரங்குகளைப் பார்வையிட்டு வருகிறார். அந்த வகையில், திருநெல்வேலி முத்துராம் தியேட்டருக்குச் சென்ற அவர் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, முதல்வர் விஜய் அரசியலுக்குச் சென்ற பிறகு தமிழ் சினிமாவில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறதா? என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, 'வெற்றிடம் எல்லாம் கிடையாது. விஜய் சார் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ஆனதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. தமிழ் சினிமாவில் சூர்யா சார் போன்ற நிறைய ஸ்டார்கள் இருக்கிறார்கள். அதனால் எந்தப் பிரச்சனையும் இல்லை' என்று கூறினார்.