திருச்சி: தமிழகத்தில் உள்ள கோயில்களில் காலாவதியான அல்லது தேதி குறிப்பிடப்படாத பிரசாதங்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை ஒப்பந்ததாரர்கள் மற்றும் கடை நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் எச்சரித்துள்ளார். திருச்சிக்கு வருகை தந்த அமைச்சர், மலைக்கோட்டை தாயுமானசுவாமி, திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் மற்றும் திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயில்களில் ஆய்வு மேற்கொண்டார்.
மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில், உபயதாரர் நிதியில் ரூ. 57.80 லட்சம் மதிப்பில் புதிய அம்பாள் மரத்தேர் உருவாகும் பணியை ஆய்வு செய்த அமைச்சர், அதனை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயிலில், பிரசாத விற்பனை நிலையத்தில் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்றும், உணவுப் பொருட்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகள் குறிப்பிடப்பட்டுள்ளனவா என்றும் ஆய்வு செய்தார். காலாவதி தேதி குறிப்பிடப்படாத உணவுப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்றும், இது குறித்து ஒப்பந்ததாரர்களிடம் விளக்கம் கேட்கவும் உத்தரவிட்டார்.
மேலும், கோயிலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் (RO Unit) TDS அளவைக் கண்காணித்து, போதுமான கனிமச் சத்துக்கள் உள்ளதா என்பதை உறுதி செய்ய தொடர் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், கழிப்பறைகள் தினமும் குறைந்தபட்சம் ஐந்து முறை சுத்தம் செய்யப்பட்டு, அதற்கான பதிவேடுகளைப் பராமரிக்கவும் அமைச்சர் உத்தரவிட்டார். பக்தர்களின் காலணிகளைப் பாதுகாக்க அமைக்கப்பட்டுள்ள இலவச காலணி பாதுகாப்பு மையங்களையும் சிறந்த முறையில் பராமரிக்க அறிவுறுத்தினார். மேலும், ரூ. 5.26 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்து, விரைந்து முடிக்க வலியுறுத்தினார்.
திருவானைக்காவல் கோயிலின் யானை அகிலாவுக்கு 24-வது பிறந்தநாள் அன்று அமைச்சர் சீ.ரமேஷ் கேக், பழங்கள், காய்கறிகள் வழங்கி வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள், சுகாதார நடைமுறைகள் மற்றும் குடிநீர் தரக் கட்டுப்பாடுகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டார். விதிமுறைகளை மீறும் கடைகள் உடனடியாக மூடப்படும் என்றும், தகுதியான அதிகாரியின் அனுமதி பெற்ற பின்னரே மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். திருவெள்ளறை கோயிலில் ராஜகோபுர கட்டுமானப் பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.