தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். இந்த திடீர் அரசியல் நகர்வு, திமுக, அதிமுக மட்டுமல்லாது காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரிகள் போன்ற கூட்டணிக் கட்சிகளிடையேயும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு 'குதிரை பேர முயற்சி' என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தவெக தலைவர் விஜய்க்கு, தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காதது ஆரம்பத்தில் சங்கடத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தாலும், 5 ஆண்டு காலமும் அவர்களின் ஆதரவை மட்டுமே நம்பி இருக்க முடியுமா என்ற கேள்வி தவெகவுக்கு இருந்தது. இதனால், 'பிளான் பி'யாக அதிமுக அதிருப்தி அணியை அணுகியதாக கூறப்படுகிறது. எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பிலிருந்து 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும், அவர்களில் சிலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேச்சு அடிபட்டது.
இருப்பினும், கட்சித் தாவல் சிக்கல்கள் மற்றும் 'தூயசக்தி' என்ற கட்சி பிம்பத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தால், அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதனால், வேலுமணி தரப்பு எம்எல்ஏக்களிடையே ஒருவித குழப்பம் நிலவி வந்தது. இந்த சூழலில், வேலுமணி தரப்பில் இருந்த 5 எம்எல்ஏக்கள் பழனிசாமி அணிக்கு திரும்பிய நிலையில், மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, பெருந்துறை ஜெயக்குமார் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். ஏற்கெனவே அமமுக எம்எல்ஏ மன்னார்குடி காமராஜை தவெக தங்கள் பக்கம் இழுத்த நிலையில், தற்போது அதிமுகவில் இருந்து மூன்று எம்எல்ஏக்களை தட்டித் தூக்கியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின், 'பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது, நம்பிக்கை வாக்கெடுப்புக்காக அதிமுகவின் ஓர் அணியை விலை பேசுவது, அமமுக உறுப்பினரை கொசுறு வாங்குவது, அதிமுக உறுப்பினர்களை பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது… இந்த மோசமான காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள் ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டுள்ளனர்' என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'கீழ்தளத்தில் ராஜினாமா, மேல்தளத்தில் கட்சியில் இணைப்பு என்றும் தமிழ்நாட்டில் கீழ்த்தரமான அரசியலை, குதிரை பேர கலாச்சாரத்தை தவெக அறிமுகப்படுத்தியுள்ளது' என காட்டமாக விமர்சித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள தவெக, 'தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் ஒரு தலைமையின் கீழ் இருக்க விரும்பாமல், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நமது தலைவரின் ஆற்றலை மதித்து, மக்கள் சேவை செய்ய அவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் வந்து இணைந்துள்ளனர்' என விளக்கம் அளித்துள்ளது.
எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, கூட்டணிக் கட்சிகளிடமிருந்தும் இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய்க்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, 'தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி குதிரை பேரத்தை ஆதரிக்கும், தமிழகத்துக்கு வெளியே அதை எதிர்க்கும் என்கிற இரட்டை நிலைப்பாட்டை ஒருபோதும் எடுக்க முடியாது. குதிரை பேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது' எனக் கண்டித்துள்ளார். விசிக பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜியும், '3 சட்டமன்ற உறுப்பினர்களின் செயல் அறமற்றது; அவர்களை ஆதரிப்பது ஆபத்தானது. உண்மையான மற்றும் நேர்மையான அரசியலில் ஈடுபடுவோம் என்று தவெக தலைவர் விஜய் முன்வைக்கும் கூற்றுக்கு, இது ஓர் அச்சுறுத்தலாகும்' எனத் தெரிவித்துள்ளார். இடதுசாரிகளும் இந்த விவகாரத்தில் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தற்போதுள்ள கூட்டணிக் கட்சிகளின் ஆதரவே ஆட்சிக்கு போதுமானது எனும்போது, தவெக மற்ற கட்சிகளின் எம்எல்ஏக்களை அபகரிப்பது ஏன் என்று கூட்டணிக் கட்சிகளின் மத்தியில் கேள்வியெழுந்துள்ளது. தற்போது தவெக வசம் 107 எம்எல்ஏக்கள் உள்ளனர். திருச்சி கிழக்கு மற்றும் 3 காலியாகும் தொகுதிகளில் தவெக வென்றால் அவர்களின் பலம் 111 ஆக உயரும். ஏற்கெனவே அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ காமராஜ் கிட்டத்தட்ட தவெக நபராகிவிட்டார். எனவே, இன்னும் 6 அதிமுக எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்தால் தனிப்பெரும்பான்மை பெறலாம், அதன்பின்னர் யார் தயவும் தேவையில்லை என்ற கணக்கோடு தவெக செயல்படுகிறதோ என்ற சந்தேகம் கூட்டணிக் கட்சிகளின் மனதில் எழுந்திருக்கிறது. அதிமுகவோடு நிற்காமல், தங்கள் பக்கமுள்ள எம்எல்ஏக்களுக்கும் வலைவீசுவார்களோ என்ற பதற்றமும் மற்ற கட்சிகளிடம் ஏற்பட்டுள்ளது. மற்ற கட்சிகளின் எம்எல்ஏக்களை திட்டமிட்டு இழுப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு ஆபத்தாகவே முடியும். தமிழக அரசியலில் புதிய 'பாய்ச்சல்' காட்டும் தவெக இதனை கவனத்தில் கொண்டால் நல்லது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
