சென்னை: அதிமுக எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோரின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என வலியுறுத்தி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகரை நேற்று (மே 25) தலைமைச் செயலகத்தில் சந்தித்த எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி) ஆகியோர் தங்கள் ராஜினாமா கடிதங்களை அளித்தனர். இதைத் தொடர்ந்து, மூவரும் தவெக-வில் இணைந்தனர். இந்த ராஜினாமாக்களை ஏற்றுக் கொண்டதாக சட்டப்பேரவைத் தலைவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி சார்பில் அதிமுக நிர்வாகிகள் தலவாய் சுந்தரம், ஓஎஸ். மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்பதுரை ஆகியோர் சபாநாயகரைச் சந்தித்து மனு அளித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, 'நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கடிதம் கொடுத்திருந்தார். ஆனால், அவர்கள் ராஜினாமா செய்வதாக கடிதம் தந்துள்ளனர். இது விதிகளுக்கும் சட்டத்துக்கும் முரணானது. இதை ஏற்கக்கூடாது' என்று கூறினார்.
மேலும், 'மூவர் ராஜினாமா செய்த ஐந்து நிமிடங்களில் தவெக உறுப்பினர் அட்டை வழங்கப்படுகிறது. இது தலைமைச் செயலகமா அல்லது தவெக தலைமை அலுவலகமா எனப் புரியவில்லை. இது குதிரை பேர நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்' என்றும் அவர் குற்றம்சாட்டினார். சபாநாயகர் சட்டப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் அதிமுக தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், மூன்று தொகுதிகளும் காலியானதாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.