மத்திய அரசின் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'தமிழகத்தில் த.வெ.க தலைவர் விஜய் நல்லாட்சியை வழங்கினால் மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு தொடரும். இல்லையென்றால், எங்கள் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம்' எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 'கடந்த 10 நாட்களுக்கு முன்பு வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால், பல ஓட்டல்கள் மூடப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இந்த சூழலில், பெட்ரோல், டீசல், சிஎன்ஜி விலை உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும். பெட்ரோல், டீசல், காஸ் போன்றவற்றை பயன்படுத்தாமல் யாரும் இருக்க முடியாது' என்றார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி மத்திய அரசு இந்த விலை உயர்வை நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது. கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோதும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. எனவே, எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி, விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் பெ.சண்முகம் வலியுறுத்தினார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க-வுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், அதிக இடங்களில் வெற்றி பெற்றதால் தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி ஆட்சி அமைக்காவிட்டால், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்து, பாஜக மறைமுகமாக ஆளக்கூடிய அவலநிலை ஏற்பட்டிருக்கும். இதைத் தடுப்பதற்காகவும், மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்தும் த.வெ.க-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினோம். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை த.வெ.க நிறைவேற்ற வேண்டும். அதன் அடிப்படையில் தான் எங்கள் ஆதரவு தொடரும்' என பெ.சண்முகம் விளக்கினார்.