மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், 'முதல்வர் விஜய் காலில் விழுந்தாலும் அனிதா ராதாகிருஷ்ணனை தவெகாவில் சேர்க்க மாட்டோம்' என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதற்கு அவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க முடியாது என்றும், முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் நிர்மல்குமார் தெரிவித்தார்.
திசை திருப்புவதற்காக தவெகாவில் இணையுமாறு அனிதா ராதாகிருஷ்ணன் மிரட்டுவதாக செய்திகள் வருவதாகவும், அவரைப் போன்ற கேவலமான நபர்களை, ரவுடிகளை தவமிருந்தாலும் தவெகாவில் சேர்க்க மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார். முதல்வர் விஜய் காலில் விழுந்தாலும் அனிதா ராதாகிருஷ்ணனை தவெகாவில் இணைக்க மாட்டோம் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
விசாரணையின் போது சிறுநீர் கழித்த நபர்களை எல்லாம் பார்த்திருப்பதாகவும், அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற நபர்களால் தான் தென் தமிழகத்தில் அமைதி குலைந்து விட்டதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சொல்லித்தான் செந்தில் பாலாஜி குதிரை பேரத்தில் ஈடுபட்டார் என்றும் அவர் கூறினார்.
தவெகாவில் இணைந்தவர்கள் மீது வழக்குகள் இருந்தாலும், அது தொடர்பான விசாரணை தொடரும் என்றும், மாற்றுக்கட்சியில் இருந்து வந்திருந்தாலும் அவர்கள் மீதான வழக்கில் எந்த சமரசமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இங்கு எதிலும் ஊழல் கிடையாது, தவறு செய்தால் சட்டம் தன் கடமையை செய்யும் என்றும், யார் ஊழல் செய்திருந்தாலும் வழக்கு பதியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் உறுதியளித்தார்.