ஆந்திராவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவது மாநில அரசுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தவும், மக்கள் தொகையை அதிகரிக்கவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, மூன்றாவது குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு ரூ.30,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். இது மாநிலத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்ட ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
இது குறித்து பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, 'முன்பு மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை ஆதரித்தாலும், இப்போது பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, மூன்றாவது குழந்தைக்கு ரூ.30,000 மற்றும் நான்காவது குழந்தைக்கு ரூ.40,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் இளம் தொழிலாளர் பற்றாக்குறையைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்' என்று தெரிவித்தார். மேலும், 'குழந்தைகள் ஒரு சுமை அல்ல, அவை நமது சொத்து. ஒரு நாட்டின் மக்கள் தொகை நிலையாக இருக்க, ஒரு பெண்ணுக்கு சராசரியாக 2.1 குழந்தைகள் என்ற கருவுறுதல் விகிதம் அவசியம்' என்றும் அவர் வலியுறுத்தினார்.
சில தம்பதிகள் வருமானத்தைப் பெருக்கும் நோக்கில் ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்கின்றனர். இன்னும் சிலர், முதல் குழந்தை ஆண் அல்ல என்றால் மட்டுமே இரண்டாவது குழந்தையைப் பெற்றுக் கொள்ள நினைக்கின்றனர். இந்த மனப்பான்மையை மாற்றவும், மக்கள் தொகைப் பெருக்கத்தை ஊக்குவிக்கவும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது சரியான முடிவு என்று நான் நம்புகிறேன்' என்றும் அவர் தனது கருத்தை பதிவு செய்தார்.
முன்னதாக, இரண்டாவது குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்குவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாக கடந்த மார்ச் மாதம் முதல்வர் சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார். தற்போது, மூன்றாவது மற்றும் நான்காவது குழந்தைகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அவர் புதிய அறிவிப்பாக வெளியிட்டுள்ளார். இது ஆந்திராவின் எதிர்கால மக்கள் தொகை சமநிலைக்கு ஒரு முக்கிய படியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.