தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) முதல்முறையாக ஒரு திருநங்கை ஓட்டுநராகப் பணியில் இணைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் ஸ்ரீதேவி.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி வரை அரசுப் பேருந்தை இயக்கி வரும் இவர், போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருச்சி-ராமேஸ்வரம் சாலையில் தினசரி நூற்றுக்கணக்கான பயணிகளைப் பாதுகாப்பாக ஏற்றிச் சென்று தனது கடமையை அர்ப்பணிப்புடன் செய்து வருகிறார். அரசுப் போக்குவரத்துத் துறையில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது, சமூகத்தில் திருநங்கைகளுக்கான சமத்துவத்தையும் அங்கீகாரத்தையும் உயர்த்தியுள்ளது.
பேருந்தை இயக்கும் ஸ்ரீதேவிக்கு சக ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் பயணிகள் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆறு மாதங்களுக்கு முன்பு திருநங்கை கலையரசி நடத்துனராகப் பணியில் சேர்ந்த நிலையில், தற்போது ஸ்ரீதேவி ஓட்டுநராகப் பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பயணிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகவும், ஒத்துழைப்பு அளிப்பதாகவும் ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார். ஆண்கள் மட்டுமே ஓட்டுநர்களாக இருந்த அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தன்னை ஓட்டுநராக நியமித்தது பெருமிதமாகவும் பெருமையாகவும் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
'இது எனக்கு மகிழ்ச்சியான வேலை. நான் இதை வெறும் வேலையாக நினைக்கவில்லை. இந்த வேலையை நான் மிகவும் விரும்பி காதலித்து செய்கின்றேன்' என்று ஸ்ரீதேவி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தற்போது தற்காலிக ஓட்டுநராகப் பணிபுரியும் தனக்கு நிரந்தரப் பணி வழங்கினால், தனக்கும் தன் குடும்பத்திற்கும், தான் சார்ந்த திருநங்கைகள் சமூகத்திற்கும் அரசு மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்ததாக எண்ணுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். 2025 இல் பயிற்சி முடித்ததாகவும், ஒரு வருட காலமாகப் பேருந்து ஓட்டி வருவதாகவும், பணியை நிரந்தரமாக்கினால் அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருநங்கைகள் என்றாலே யாசகம் கேட்கத்தான் செல்வார்கள் என்று நினைத்தவர்கள், தான் இந்த வேலைக்கு வந்ததால் எல்லோரும் சந்தோஷப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
நவீன காலகட்டத்தில் திருநங்கைகள் கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்துத் துறைகளிலும் தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு திருநங்கை பேருந்து ஓட்டுநராகக் களம் இறங்கியிருப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. கனரக வாகனங்களை இயக்குவது சவாலானது என்ற நிலையை உடைத்து, புதுக்கோட்டை-திருச்சி இடையே தினசரி அரசுப் பேருந்தை வெற்றிகரமாக இயக்கி வருகிறார். குறிப்பாக, அதிக நெரிசல் நிறைந்த திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் எந்தவித பதட்டமும் இன்றி பேருந்தை இயக்கி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. போக்குவரத்துத் துறையில் புதிய வரலாற்றுப் புரட்சியை ஏற்படுத்தியுள்ள ஓட்டுநர் ஸ்ரீதேவிக்கு அரசு உடனடியாகப் பணியை நிரந்தரமாக்கி கௌரவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வலுவாக எழுந்துள்ளது.