தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சில மாவட்டங்களில் உள்ள ரேஷன் கார்டுகளில் ஆதார் எண் இணைக்கப்படாமல் உள்ளது. இதனால், வேலை காரணமாக வெளியூர்களில் தற்காலிகமாக வசிப்பவர்கள் உட்பட அனைவரும் வரும் ஜூன் 25ஆம் தேதிக்குள் கைவிரல் ரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், ரேஷன் கார்டில் உள்ள இறந்த குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை உடனடியாக நீக்க வேண்டும். இதற்காக, வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ரேஷன் பொருட்கள் வழங்குவதில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் இந்த கைரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ரேஷன் அட்டைகளில் பெயர்மாற்றம் அல்லது இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் இருப்பது போன்ற சிக்கல்களைத் தவிர்க்க, ஆதார் எண் இணைத்தல் மற்றும் கைரேகை பதிவு அவசியமாகிறது.
இந்நிலையில், இறந்த நபர்களின் ஆதார் எண் விவரங்களைப் பெற்று, அதை அறிக்கையாக அனுப்பி வைக்க அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயமாக கைரேகை பதிவு செய்ய வேண்டும். ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் உடனடியாக இணைத்துவிட்டு, கைரேகை பதிவு செய்ய வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் இறந்திருந்தால், அவர்கள் குறித்த அறிக்கையை உடனடியாக கூட்டுறவுத் துறைக்குத் தெரிவிக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பொருட்களின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே இறந்தவர்களின் அறிக்கை கோரப்பட்டுள்ளது. பெரும்பாலான பொதுமக்கள் ரேஷன் கார்டில் ஆதார் கார்டை இணைத்துவிட்டாலும், இன்னும் சிலர் இணைக்காததால் இந்த அவசர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை இணைத்த பிறகு, அருகில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று கைரேகை பதிவு செய்யலாம். ரேஷன் கடை ஊழியரிடம் கைரேகை பதிவு செய்யக் கூறினால், அவர் e-PoS இயந்திரத்தில் ரேஷன் கார்டு அட்டையை வைத்து, ஆதார் எண்ணை உள்ளிட்டு, உங்கள் கைரேகையைப் பெறுவார். ஆதாரில் உள்ள கைரேகையுடன் இது பொருந்தினால், பதிவு வெற்றிகரமாக முடியும்.