தமிழ்நாட்டில் வண்ணமயமான கலர் அப்பளங்கள் விற்பனை செய்வதற்கு தமிழ்நாடு அரசு அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
அடிக்கடி இதுபோன்ற கலர் அப்பளங்களை உட்கொள்வது செரிமான பிரச்சனைகள், சிறுநீரக பாதிப்புகள் மற்றும் புற்றுநோய் போன்ற கடுமையான உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வழிவகுக்கும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு இது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில், 'கண்களைக் கவரும் வண்ணங்களில் இருக்கும் இந்த கலர் அப்பளங்களை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்க வேண்டாம். ஏனெனில் அவை குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த வண்ண அப்பளங்களை குழந்தைகள் சாப்பிடும்போது அவர்களுக்கு ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படுவதோடு, கவனச்சிதறலும் உண்டாகலாம் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. எனவே, இதற்கு மாற்றாக, பாரம்பரிய முறையில் உளுந்து, அரிசி போன்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் அப்பளங்களை வாங்கி உண்ணுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்தைகள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் பல்வேறு பொருட்காட்சிகள் நடைபெறும் இடங்களில் இந்த வண்ண அப்பளங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. செயற்கையான நிறமூட்டிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த கலர் அப்பளங்கள் உயிருக்கு ஆபத்தானவை என தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை மீண்டும் ஒருமுறை எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் அனைவரும் இந்த அறிவிப்பை கவனத்தில் கொண்டு, ஆரோக்கியமான பாரம்பரிய அப்பளங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குழந்தைகளின் நலன் கருதி இந்த முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
