தமிழ்நாட்டில் இன்று முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான களப் பணிகள் தொடங்குகின்றன. இந்தியாவிலேயே முதன்முறையாக, முழுமையான டிஜிட்டல் கட்டமைப்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ள ஒரு ஒருங்கிணைந்த இணையதள அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கணக்கெடுப்பின்போது, வீடுகளின் எண்ணிக்கை, வீடுகளின் நிலை, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சமையல் எரிவாயு பயன்பாடு, மின்வசதி, இணைய வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்து மொத்தம் 33 கேள்விகள் மட்டுமே கேட்கப்படும். இதன் இரண்டாம் கட்டமாக, ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தப்படும். சுய கணக்கெடுப்பில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள், கணக்கெடுப்பு அலுவலர் வரும்போது தாங்கள் இணையத்தில் பதிவு செய்த விவரங்களை காண்பித்தால் போதுமானது.
இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதுதான் குடும்ப உறுப்பினர்களின் முழுமையான விவரங்கள் சேகரிக்கப்படும். இந்தத் தரவுகள், தேசிய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் திட்டமிடல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள், கொள்கை வடிவமைப்பு மற்றும் ஆய்வுகளுக்கு முக்கிய ஆதாரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (2026 ஆகஸ்ட் 1) தொடங்கி ஆகஸ்ட் 30-ம் தேதி வரை, தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நடைபெற உள்ளன. இந்தப் பணிகளுக்காக, 19,000 அதிகாரிகளின் மேற்பார்வையில், 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்கள் அனைத்து வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று கணக்கெடுப்பை நடத்துவார்கள். 33 கேள்விகளைக் கொண்ட ஒரு கட்டமைக்கப்பட்ட கேள்வித்தாளைப் பயன்படுத்தி இந்தப் பணி மேற்கொள்ளப்படும். வீட்டுவசதி நிலை மற்றும் அடிப்படை வசதிகள் போன்ற முக்கிய தரவுகள் சேகரிக்கப்படும்.
விரிவான மற்றும் துல்லியமான கணக்கெடுப்பை உறுதி செய்வதற்காக, இந்தியாவில் முதல் முறையாக முழுவதும் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. களப் பணியின்போது, கணக்கெடுப்பாளர்கள் தரவுகளை டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய ஒரு பிரத்யேக மொபைல் செயலியைப் பயன்படுத்துவார்கள். இது விரைவான செயலாக்கம், அதிக துல்லியம் மற்றும் தடையற்ற கணக்கெடுப்பு அனுபவத்தை வழங்கும்.
1948-ம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின்படி, சேகரிக்கப்பட்ட அனைத்துத் தகவல்களும் சட்டப்பூர்வமாகப் பாதுகாக்கப்பட்டு, முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும். இந்தப் புள்ளிவிவரங்கள் பகுப்பாய்வு மற்றும் பொதுக்கொள்கை உருவாக்கத்திற்காக மட்டுமே பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படும்.
களச் செயல்பாடுகளுக்கு முன்னதாக, 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்காகப் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சுய-கணக்கெடுப்பு வசதி, தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த ஜூலை 17, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ இணையதளம் (se.census.gov.in) வழியாகத் தங்கள் விவரங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
சுய கணக்கெடுப்பை நிறைவு செய்துள்ளவர்கள், வீட்டுப் பட்டியல் தயாரிப்புப் பணியை எளிதாக்குவதற்காக, வருகை தரும் கணக்கெடுப்பாளரிடம் பகிர்ந்துகொள்ள, தாங்கள் உருவாக்கிய சுய கணக்கெடுப்பு அடையாள எண்ணை உடனடியாகக் கைவசம் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சுய கணக்கெடுப்பு வசதியைப் பயன்படுத்தாத குடும்பத்தினர் உட்பட அனைத்துக் குடும்பங்களும், வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதிக் கணக்கெடுப்புக் களப்பணிகளின் போது கணக்கெடுக்கப்படுவார்கள். இந்தப் பணியின் போது, களப்பணியாளர்களுக்கு முழு ஆதரவை வழங்கி, இந்த முக்கியமான தேசியப் பணியை வெற்றிகரமாக நடத்துவதற்குப் பங்களிக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
