எங்களை தாக்க நினைத்தால் தாராளமாக தாக்குங்கள், ஆனால் வாக்களித்த தமிழக மக்களை தாக்காதீர்கள் என்று திமுகவினருக்கு தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரஷ் சோடங்கர் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், 'எங்களை விமர்சிக்க ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் உரிமை உண்டு. அதற்காக நாங்கள் ஒருபோதும் ஆத்திரப்பட மாட்டோம். ஆனால் தமிழக மக்கள் வழங்கிய ஜனநாயக தீர்ப்பை யாரும் கேள்வி கேட்கவோ அவமதிக்கவோ கூடாது' என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மக்கள் அரசியல் முதிர்ச்சி உடையவர்கள் என்றும், அவர்கள் புத்தி கூர்மையுடனும் தெளிவுடனும் வாக்களிப்பவர்கள் என்றும் கிரஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். தங்களுக்கு எதிரான தனிப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என விழிப்புணர்வுடன் முடிவு செய்துள்ளதாகவும், ஒரு தசாப்த காலமாக முக்கிய அமைச்சரவை பதவிகளையும் அதிகாரத்தையும் அனுபவித்துவிட்டு, 2014 மக்களவைத் தேர்தலில் இழந்த துரோகத்தை நினைவூட்ட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக வரலாற்றில் திமுக ஒருபோதும் தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சி அமைத்ததில்லை என்பதை அறிந்தும், தங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் இருந்தபோதிலும் திமுக கூட்டணியில் இணைந்ததாகவும் கிரஷ் சோடங்கர் குறிப்பிட்டுள்ளார். மக்களின் தீர்ப்பை பணிவுடனும் பெருந்தன்மையுடனும் மதிப்பே தங்கள் கோட்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கிருஷ்ணகிரி முன்னாள் எம்பி செல்லகுமார், 'அவர்கள் தரம் தாழ்ந்து போய்விட்டார்கள் என்பதற்காக காங்கிரஸ் தரம் தாழ்ந்து போய்விட முடியாது. தரம் தாழ்ந்து பேசும் மனிதர்களுக்கு காங்கிரஸ் கட்சி முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மக்கள் மாற்றத்தை வேண்டும் என வாக்களித்திருக்கிறார்கள். திமுக ஆட்சி மீதான அதிருப்திதான் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வியடையக் காரணம். பாஜக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே திமுகவுடன் தேர்தல் கூட்டணி வைத்தோம். அதனால் அதிகாரத்தில் எங்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை' என்று கூறியுள்ளார். திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் திமுக தலைவர்களின் கருத்துக்களுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.