நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) நடைபெற்று வரும் நிலையில், இந்தப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வாக்காளர் பட்டியலின் துல்லியத்தன்மை ஜனநாயகத்தின் நம்பகத்தன்மைக்கு அவசியம் என்றும், நேர்மையான தேர்தலுக்கு இது இன்றியமையாதது என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ளும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை எதிர்த்து ஏடிஆர், பியுசிஎல் உள்ளிட்ட அமைப்புகளும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், திமுக, விசிக போன்ற அரசியல் கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு நேற்று வழங்கியது.
40 ஆண்டுகளுக்கும் மேலாக வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படாத நிலை, வேகமான நகரமயமாக்கல் காரணமாக வாக்காளர்களின் புலம்பெயர்வு, பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கம் போன்ற காரணங்களால் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் இடம்பெறுதல் போன்ற சிக்கல்கள் நிலவுவதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்தத் துல்லியத்தன்மை பாதிப்பைத் தடுக்கவே எஸ்ஐஆர் பணி அவசியமாகிறது என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
நியாயமான மற்றும் நேர்மையான தேர்தல் என்பது வெறும் வாக்குப்பதிவு முறையில் மட்டும் இல்லை, மாறாக வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையையும் சார்ந்துள்ளது. எஸ்ஐஆர் பணிகள், நியாயமான தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அரசமைப்பு கடமைக்கு உயிரூட்டுகிறது. மேலும், இந்த பணிகள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துடன் முரண்படவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு முழு அதிகாரம் உள்ளது என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.