காதல், திருமணம், குடும்பம் மற்றும் தொழில் பிரச்சனைகளுக்கு தீர்வு தருவதாகக் கூறி, சமூக வலைத்தளங்களில் போலி ஜோதிடர் கணக்குகளை உருவாக்கி, அப்பாவி மக்களை ஏமாற்றி ரூ.60 லட்சத்திற்கும் மேல் கொள்ளையடித்த ராஜஸ்தான் ஆன்லைன் ஜோதிட மோசடி கும்பலை அகமதாபாத் சைபர் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
'அஸ்ட்ராலஜர் பூஜா கின்னார்மா' மற்றும் 'ஆச்சார்யா விகாஸ் சாஸ்திரி' போன்ற பெயர்களில் போலி கணக்குகளை உருவாக்கிய இந்த கும்பல், தங்களை ஆன்மீக குருக்கள் போல காட்டிக்கொண்டு, காதல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாக கூறி மக்களை கவர்ந்துள்ளது. குஜராத்தின் அகமதாபாத் நகரைச் சேர்ந்த பலர் இவர்களின் வலையில் சிக்கியுள்ளனர்.
இந்த கும்பல், பூஜை மற்றும் சடங்குகள் செய்வதாகக் கூறி அப்பாவி மக்களிடம் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் கட்டணம் வசூலித்துள்ளது. மேலும், பூஜையின் போது அரை நிர்வாண கோலத்தில் இருக்க வேண்டும் என்று கூறி, அதனை புகைப்படம் எடுத்துள்ளனர். பின்னர், அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மார்ஃபிங் செய்து, பொதுவெளியில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்துள்ளனர்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்திய அகமதாபாத் சைபர் பிரிவு போலீசார், ராஜஸ்தானைச் சேர்ந்த இந்த மோசடி கும்பலை கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் அப்பாவி மக்களை ஏமாற்றி ரூ.60 லட்சத்திற்கும் மேல் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.